அருமனை அருகே பெண்ணை தாக்கிய காட்டெருமை

அருமனை, ஜூன் 3: அருமனை அருகே மோதிரமலை குலஞ்சிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (52). அவரது மனைவி சுசீலா (52). மலைப்பகுதியில் வசிக்கும் இவர்கள் நேற்று முன் தினம் அருகில் உள்ள கோதமடகு பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று 2 பேரையும் வழிமறித்து தாக்கியது.

இதில் சுசீலாவின் கையில் எலும்பு முறிந்தது. உடனே அவரை மீட்ட ரவீந்திரன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதை அறிந்த களியல் வனச்சரகர் முகைதீன் தலைமையிலான குழுவினர், ரூ. 5 ஆயிரம் முதலுதவிக்காக சுசீலாவுக்கு வழங்கினர்.

வழக்கமாக சிகிச்சை முடிந்த பின் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய பின்பு தான் நிவாரணத்தொகை வழங்கப்படும். ஆனால் சுசீலா குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக முதலுதவிக்கு நிவாரணத்தொகையை வழங்கியது மலை வாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதி தொகை மருத்துவ அறிக்கை கிடைத்த பின்பு வனத்துறை சார்பாக வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

Related Stories: