×

தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா உள்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றனர். இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த எண்ணிக்கை 38ஆக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் கூடி நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் உட்பட ஐந்து பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நான்கு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று அரசிதழ் வெளியிட்டது. அதன்படி பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா , ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி, மூத்த வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகளின் பதவியேற்பு விழா நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வி.மோகனா, 1950-க்கு பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக நியமனம் செய்யப்படும் 11வது நீதிபதி என்பதும், இரண்டாவது பெண் நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Mohana ,Tamil Nadu ,Supreme Court ,Chief Justice ,Suryakanth ,New Delhi ,India ,
× RELATED போலீசாரின் அத்துமீறலுக்கு...