×

`கஞ்சா, குட்கா விற்பனையை தடுத்து விடுங்கள்’

கோவை, ஜூன் 2: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு, கலால் துறை பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன், மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களான கஞ்சா, பான்பராக், குட்கா போன்றவற்றின் விற்பனையை அடியோடு தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், போலீசார் இதில் தீவிரம் காட்ட வேண்டும். போதை பொருட்கள் விற்பனை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும். கோவை மாநகரில் விடுதிகளுக்கு, பெண்கள் இரவு 9 மணிக்குள் திரும்பி வந்து விடுகிறார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். தங்கும் விடுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பிளாட்பார வாசிகள், இரவில் பணி செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் பெண்கள், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி அருகே மதுபானங்கள், போதை வஸ்துக்கள் விற்பனை செய்யாமல் தடுக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் நிலையில், மாணவிகளுக்கு பொது இடங்களில் ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? என கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக், எப்.எல் உரிமம் பெற்றவர்கள் கூடுதல் பணம் வசூலித்தால், இரவில் கூடுதல் நேரம் மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான விற்பனையில் இனி எந்த பிரச்னையும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Coimbatore ,Coimbatore District Collector ,Tamil Nadu ,Liquor Prohibition ,Minister ,Vignesh ,Pawan Kumar ,
× RELATED வடகோவை ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்