பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று போட்டியில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஜெய்மி பரியாயும், அமெரிக்காவின் பிரான்சிஸ் டையபோவும் மோதினர். இவர்கள் 2 பேருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. முதல் 4 செட்களில் ஆளுக்கு 2 செட்களை வென்றனர். இதனால் 5வது செட் ஆட்டம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென வீரர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 5-வது செட் ஆட்டம் தொடங்கும் முன்பு பரியாவிடம், ‘‘நீங்கள் வீழ்த்த முடியாதவர் அல்ல. வெல்வதற்கு கடினமான வீரர் போன்று நினைக்க வேண்டாம்’’ என்று டையபோ கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக போட்டி நடுவரிடம் பரியா முறையிட்டார். இருவரையும் அமைதி காக்கும்படி நடுவர் அறிவுறுத்தினார்.
ஆனாலும் டையபோ, ‘‘எனக்கு வெற்றி அவசியம். நான் பதற்றமடையவில்லை’’ என்றார். பதிலுக்கு பரியா கிண்டல் செய்தபடி, ‘‘என்னவோ, அவர் தன்னை குத்துச்சண்டை வீரர் அல்லது வேறு பெரிய வீரர் என நினைத்து கொண்டிருக்கிறார்’’ என்றார். போட்டி நடுவர் இருவரையும் சமாதானம் செய்தார். பின்னர் போட்டி துவங்கியது. போட்டி முடிவில் பரியாவை 4-6, 6-7 (2), 7-6 (4), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் டையபோ வீழ்த்தினார்.
