தூத்துக்குடி,மார்ச் 4: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவித்திறன் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி உலக செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் சார்பாக உலக செவித்திறன் தினம் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கடந்த மாதம் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் பயிற்சி கருவியினை மருத்துவமனையின் முதல்வர் ரேவதி வழங்கினார். மேலும், செவித்திறன் பயிற்சியில் உள்ள குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் சிவசங்கரி மற்றும் பிற துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.