பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பார் பகுதியில் உள்ள உமாநாத்தில் இருந்து கங்கையாற்றின் மறுகரையில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்துக்கு சென்று விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனங்கள் சேகரித்து விட்டு திரும்புவது வழக்கம். அதுபோன்று இன்று அதிகாலையில் கங்கையாற்றில் இருந்து கால்நடை தீவனங்கள் சேகரித்து விட்டு பாட்னாவின் பார் பகுதியில் உள்ள உமாநாத்துக்கு படகில் 14 பேர் திரும்பி கொண்டிருந்தனர்.
பாட்னாவின் கங்கா படித்துறை அருகே வந்தபோது திடீரென பயங்கர சூறைக்காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் தாங்காமல் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.தகவலறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 5 பேரை காணவில்லை. மற்றவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
