அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: