புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவ விவகாரத்தில் தர்மேந்திரபிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜ தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் என்.எஸ்.யு.ஐ. தொண்டர்களைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதானை நீக்கக் கோரிக்கை விடுத்தார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, இத்தாலியில் மிட்டாய்களை விநியோகித்துக்கொண்டு ‘ரீல்ஸ்’ வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்தியாவில், நீட் வினாத்தாள் கசிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நீதி கேட்டு வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருந்தனர். ஏனெனில், நீட் வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழித்துவிட்டது. பல மாணவர்கள் தங்கள் உயிரையேகூட இழந்துள்ளனர். ஆனால் மோடி தற்கான பொறுப்பை ஏற்கவுமில்லை; தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கவுமில்லை. இதுகுறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவுமில்லை.
இப்போது, மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நீதி கேட்டுத் தங்கள் குரலை உயர்த்தும்போது பாஜ ஆளும் மாநில அரசுகள் அவர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றன. மாணவர்களின் கேள்விகளுக்குத் தடியடிகளால் பதிலளிக்கும் ஒரு அரசாங்கம், பொறுப்புடைமையின் அடிப்படையில் இயங்குவதில்லை. அது அச்சத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் நாங்கள் அஞ்சி நடுங்குபவர்கள் அல்ல.
கல்வி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையிலும், நாட்டில் வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம். தோல்வியடைந்த இந்த அரசாங்கம் யாருடைய எதிர்காலத்தைத் திருடியதோ, அத்தகைய ஒவ்வொரு மாணவருக்காகவும் நடைபெறும் போராட்டமே இது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
