×

சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கை.!!

கொழும்பு: ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே அமைந்துள்ள மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) நீண்டகால குத்தகை மற்றும் நிர்வாகத்திற்காக உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து நடத்த உள்நாட்டு மற்றும் சர்வதசே முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்து உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு சீன வங்கியிடமிருந்து சுமார் 209 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்று துவக்கப்பட்ட இந்த MRIA விமான நிலையம், பல ஆண்டுகளாகவே பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது.

2013-ஆம் ஆண்டில் சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட மற்றும் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுமான இந்த விமான நிலையம், இந்தியாவால் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. MRIA திறக்கப்பட்டதிலிருந்து வணிகப் போக்குவரத்தை ஈர்ப்பதில் சிரமப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகள், தளவாடங்கள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவே 30 ஆண்டு கால குத்தகை மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விதித்துள்ளது. முழுமையாகப் பயன்படுத்தப்படாத இந்த சர்வதேச விமான நிலையத்தை ஒரு துடிப்பான விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கும், இதன் மூலம் லாபத்தை ஈட்டவும் இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து ஜூன் 9-ஆம் தேதிக்குள் விருப்ப வெளிப்பாடுகளை (Expressions of Interest – EOI) இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம், ஒரு பிரம்மாண்டமான முனையக் கட்டிடம் மற்றும் 3,500 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை ஆகியவற்றைக் கொண்டிருந்த போதிலும், வணிக ரீதியாக லாபகரமான நிலையை அடையத் தேவையான பயணிகள் போக்குவரத்தையும் விமான நிறுவனங்களின் ஒப்பந்தங்களையும் ஈர்க்க தவறியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Sri Lanka ,Colombo ,Government of Sri Lanka ,Matala Rajapaksa International Airport ,MRIA ,Hambantota ,Madtala Rajapaksa International Airport ,
× RELATED சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்