ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் கொத்தகோட்டா மேம்பாலம் அருகே, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில், அதிவேகமாக வந்த இன்னோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால் கார் முற்றிலும் நசுங்கியது. காரில் பயணம் செய்த 8 பேரில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கொத்தகோட்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
