வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 10% சதவீதம் கூடுதல் வரி , சட்டவிரோதம் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க, அதிபர் டிரம்ப் 10 சதவீதம் வரியை விதித்திருந்தார். அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பால் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக அச்சுறுத்தல் விடுத்த அவர், சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்தார்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ஐ அதிபர் டிரம்ப் பயன்படுத்தினார். வர்த்தக பற்றாக்குறையை குறைத்து அமெரிக்காவில் அதிக உற்பத்தியை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார். மேலும், வருவாயை உயர்த்தவும், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர் வரி விதிப்பு நடவடிக்கையை பயன்படுத்தினார். இதனிடையே, டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என 3 கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது.
இந்த சூழலில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த பிப்ரவரியில் வெளிநாடுகள் மீதான பரஸ்பர வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சுங்க வரி உத்திக்கு அமெரிக்க வர்த்தக கோர்ட்டு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் புதிதாக விதித்த 10% சதவீத உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க வர்த்தக கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
