×

புதிய அரசு இன்னும் அமையாததால் ஆளுநர் கட்டுப்பாட்டில் ஆட்சி வந்தது: தலைமைச்செயலாளர், டிஜிபி-யை அழைத்து ஆலோசனை

 

சென்னை: தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டதன் எதிரொலி மற்றும் தேர்தல் முடிவு தெரிந்து 4 நாட்கள் ஆகியும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தில், தமிழக ஆளுநர் அர்லேகர் கட்டுப்பாட்டில் தற்போது ஆட்சி நடந்து வருகிறது. பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால், விஜய்யால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மெஜாரிட்டிக்கு தேவையான 6 எம்எல்ஏக்களை பெற பல்வேறு முயற்சிகளை விஜய் தரப்பினர் செய்து வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் தற்போது யாரும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள் இல்லை. அதனால் புதிய ஆட்சி அமையும் வரை, அனைத்து பணிகளும் தனது பார்வையின் கீழ் தான் நடைபெற வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றிய அறிக்கைகளை தினசரி தனக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தேர்தல் முடிந்ததை ஒட்டி 16வது சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும், முழு மெஜாரிட்டியுடன் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால், தற்போது தமிழகத்தில் ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடைபெறுவதாக கருதப்படுகிறது. இதனால்தான், நேற்று தலைமை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோரை ஆளுநர் அழைத்து பேசியுள்ளார்.

 

Tags : Chief Secretary ,DGP ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,Governor ,Arlekar ,Vijay… ,
× RELATED 15 ஆண்டுகளாக பயோ காஸ் மூலம் சமையல் செய்யும் பெண் கவுன்சிலர்