×

மீன் கழிவுகள் கொட்டுவதால் அசுத்தம் வீரநாராயண பெருமாள் கோயில் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்

*பக்தர்கள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோயிலின்‌ எதிரே உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவின்போது தெப்பல் உற்சவம் நடக்கும்.

அப்போது பக்தர்கள் இக்குளத்தில் தான் நீராடுவர். அதுபோல் கோயிலுக்கு தினந்தோறும் இந்த குளத்தில் இருந்துதான் நீரை எடுத்து சென்று மூலவருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

புண்ணிய தீர்த்தமாக பக்தர்களால் பார்க்கப்படும் இந்த தெப்பக்குளம், கடந்த சில ஆண்டுகளாக மிக அசுத்தமாக உள்ளது. இதை சுத்தம் செய்ய, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சுத்தம் செய்து கொடுக்கக்கூறி அதிகாரிகள் அணுகினால், பல்வேறு தனிநபர்கள் முன்வருவர். ஆனால், அதற்கான முயற்சியை அறநிலையத்துறை எடுக்கவில்லை.

அசுத்தமான தெப்பக்குளத்தில் ஓரத்தில் மீன் மார்க்கெட் இருப்பதால் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன.அதுபோல் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் படிக்கட்டுகளில் அமர்ந்து இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து எரிவது, குளத்தில் வீசி எரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், தெப்பக்குளம் சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன், ஆஞ்சநேயர், பிள்ளையார் உள்ளிட்ட கோயிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரில் இறங்க முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர்.

எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக தெப்பக்குளத்தை சுத்தம் செய்து சுற்றிலும் பாதுகாப்பு வேலி, நடைபாதை அமைத்து பாதுகாக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veera Narayana Perumal ,Kattumannarkovil ,Veera ,Narayana Perumal ,Kattumannarkovil, Cuddalore district ,Theppakulam ,Theppal Utsavam ,Chariot Festival ,
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!