மேட்டூர்: தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 855 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 727 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 80.28 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 80.19 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 42.14 டிஎம்சியாக உள்ளது.
