சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பலமடங்கு உயர்த்துவது ஏன் என்று தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் தென் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநி திமாறன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. முதலாவதாக குரல் கொடுத்தது தமிழகம் தான். திமுக சார்பில் முதலாவதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தாய்மார்களின் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் மோடி. கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து வருமானமின்றி இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அடியை கொடுக்கும்.