கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: 2023ல் பெண்கள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை எடுத்து வைத்தோம். தனிப்பட்ட முறையில் நான் பல்வேறு கட்சியிடம் ஆதரவு கேட்டேன். பெண்களுக்கு இதனால் கிடைக்கப்போகும் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தேன்.
நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஆசை நிறைவேறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும் நிலைமை இருந்தது. ஆனால் அது தற்போது நிறைவேறவில்லை.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்காக வழங்கி இருக்கிறது. டபுள் இன்ஜின் அரசாங்கம் இருந்தால் திட்டங்கள், பணிகள் வேகமாக நடக்கும். நலத்திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையும். ஏழை நடுத்தர மக்கள் பயன் பெற முடியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் டபுள் இன்ஜின் அரசு அமைந்தால் தமிழர்களின் வாழ்வு மேம்படும். விவசாயிகள் பொதுமக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இவ்வாறு மோடி பேசினார். கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, பாஜ வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
