காரைக்கால்: கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி வருகிற 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த வீரவேல் என்பவரது விசைப்படகில் காரைக்கால் மாவட்டம் கீழையூரைச் சேர்ந்த அருள்செல்வன் (28),கோட்டுச்சேரி மேடு சுனாமி நகரை சேர்ந்த சஞ்சய் (30), டி ஆர் பட்டினம் சேர்ந்த பிரதீப் (29), பட்டினச்சேரி விமன் (24), மதன் (26), நிஷ்வந்தன் (20), கிளிஞ்சல் மேடு சாமிநாதன் (20), நாகை மாவட்டம் சமந்தாபேட்டை தமிழ்வாணன் (42), மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கார்த்திக் (32), விக்னேஷ் (21), வீரேந்திரராஜன் (33) மற்றும் ஜெயவீரன் (28) ஆகிய 12 மீனவர்கள் கடந்த 10ம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் பரப்பில் காரைக்காலில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடைபடையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒலிபெருக்கில் கூறி படகை சுற்றிவளைத்து 12 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். மேலும் பல கோடி மதிப்புள்ள படகு, லட்சக்கணக்கில் பிடிக்கப்பட்ட மீன்களையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
