×

காவல் கரங்கள் திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: சாலை ஓரத்தில் இருக்கும் ஆதரவற்றோர், வீடற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் போன்றவர்களை மீட்டு அவர்களை குடும்பத்துடன் இணைப்பது மற்றும் பாதுகாப்பு வழங்குவது போன்ற நோக்கத்துடன் 2021ம் ஆண்டு ‘காவல் கரங்கள் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: காவல் கரங்கள் திட்டம் என்பது சென்னை பெருநகர காவல்துறையின் மனிதநேய அடிப்படையிலான ஒரு புதுமையான சமூகப் பணித் திட்டமாகும். இது சாலையோரங்களில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி, உளவியல் ஆதரவு, குடும்பத்துடன் மீண்டும் இணைத்தல் அல்லது பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. மேலும், உரிமை கோரப்படாத உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்து மரியாதையுடன் அனுப்பி வைக்கும் பணியையும் இத்திட்டம் மேற்கொள்கிறது. ‘மனிதம் போற்றுவோம், மனித நேயம் காப்போம்’ என்பதை மையமாகக் கொண்ட இத்திட்டம், காவல்துறையின் பாரம்பரிய பாதுகாப்புப் பணியைத் தாண்டி சமூக நலன் நோக்கிய பரந்த பார்வையை வெளிப்படுத்துகிறது.

2021ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பெருநகர காவல்துறையின் முனைப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் சென்னை முழுவதும் விரிவாக்கப்பட்டு, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களிலும் பின்பற்றப்பட்டது. திட்டத்தின் செயல்பாட்டுக்கு போலீஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், சாலை ரோந்து மற்றும் கண்காணிப்பு மூலம் ஆதரவற்றோரை அடையாளம் கண்டு மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 2021 முதல் 2025 மே வரை நான்கு ஆண்டுகளில் 8,233 ஆதரவற்ற நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 1,304 பேர் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 85 பேர் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 976 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்; அவர்களில் 463 பேர் குணமடைந்து குடும்பத்துடன் திரும்பினர். 2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் ஸ்காச் தங்க விருது (Skoch Gold Award) பெற்று தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டம் வெறும் மீட்புப் பணியைத் தாண்டி, ஆதரவற்றோருக்கு புதிய வாழ்வு அளித்து, சமூகத்தில் மனிதநேயத்தை வளர்க்கிறது.

Tags : Hands ,
× RELATED காலனி கோயிலுக்குள் வர மாட்டீங்களா…?...