×

ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங்கேற்கும் ஆளுநர் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையருக்கு பெ.சண்முகம் கடிதம்

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் எழுதிய கடிதம்: தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும், பாஜவின் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் அமைப்புகளையும் தவறாமல் சந்தித்து வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் அவர் சந்தித்தவர்களில் பாஜவைச் சேர்ந்தவர்களை சந்தித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலகட்டத்தில் ஒரு அரசியல் கட்சியின் அமைப்பின் கூட்டங்களில் நாட்டின் அரசியலமைப்பு தலைவர் கலந்துகொள்வது, அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் உணர்விற்கும் எதிரானதாக கருதப்படும். ஆளுநர் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைப் பாதுகாத்து பேணி காக்க, கடமைப்பட்டிருக்கும் போது, இவ்வாறு செயல்படுவது தமிழ்நாட்டில் தேர்தல் செயல்முறையை நிச்சயமாக சீர்குலைக்கும்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினருடன் நடத்தப்படும் சந்திப்புகளினால் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : RSS ,P. Shanmugam ,Chennai ,Marxist ,State Secretary ,Chief Election Commissioner ,India ,Tamil Nadu ,Governor ,Rajendra Vishwanath Arlekar ,BJP ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...