×

புதிதாக முளைத்துள்ள காஸ் சிலிண்டர் மோசடி; உஷாராக இருப்பது எப்படி?

 

மக்களின் தேவை, பயம். இதுதான் மோசடிகளின் அடித்தளம். இந்த மோசடிகள் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் – எல்.பி.ஜி காஸ் சிலிண்டர் மோசடி. ஈரான் போரினால் இந்தியாவிற்கு எரிசக்தி சப்ளை தடைப்பட்டுள்ளது. இதனால், இங்கே எல்.பி.ஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அரசும் அதன் விநியோகத்தில் பல கெடுபிடிகளை விதித்துள்ளது. ‘ஒருவேளை காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய…’ என்கிற பயத்திலேயே மக்கள், காஸ் சிலிண்டர் கிடைக்கிறது என்றாலே அங்கே ஆஜராகி விடுகின்றனர். இதை பயன்படுத்திதான், இப்போது புது மோசடி அரங்கேறி வருகிறது.
‘உங்கள் எல்.பி.ஜியில் KYC அப்டேட் செய்யப்படவில்லை. குறைந்த ஸ்டாக்கே உள்ளது. உடனே அப்டேட் செய்து ஆர்டர் செய்யுங்கள்…’

‘இன்னும் உங்களது எல்.பி.ஜியை நீங்கள் ஆதாருடன் இணைக்கவில்லை… உடனே அப்டேட் செய்யுங்கள்…’
‘எல்.பி.ஜி கனெக்‌ஷனை தொடர உடனே பேமென்ட் செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் கனெக்‌ஷன் உடனடியாக ரத்து செய்யப்படும்…’ இப்படி லிங்கு..களுடன் வித விதமான எல்.பி.ஜி கனெக்‌ஷன் மெசேஜ்கள் பல மொபைல் போன்களுக்கு வருகின்றன. இதில், எந்த லிங்கை தொட்டாலும், ஒன்றாக நம் தகவலை திருடி விடுவார்கள். இல்லையென்றால், நமது பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள்.

இந்த மோசடி குறித்து டெல்லி போலீஸ் எச்சரித்துள்ளது. இங்கே தமிழ்நாட்டிலும் இந்த மோசடி அங்கொன்றும், இங்கொன்றும் அரங்கேறி வருகிறது. இந்த மோசடியில் இருந்து தப்பிக்க, நீங்கள் எப்போதும் எப்படி காஸ் சிலிண்டரை புக் செய்வீர்களோ, அப்படியே செய்யுங்கள். எந்த லிங்கையும் கிளிக் செய்து புக் செய்யாதீர்கள். KYC அப்டேட்… ஆதார் லிங்கிங் என ஏதேனும் மெசேஜ் வந்தால், உங்களுடைய காஸ் சிலிண்டர் ஏஜென்சிக்கே நேரடியாக தொடர்புகொண்டு பேசி விடுங்கள். எந்த மோசடியிலும் சிக்கிவிடாதீர்கள் மக்களே… மிக மிக கவனம்..!

 

Tags : India ,Iran war ,
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...