×

உலகில் முதல் முறையாக பாலைவன மணலை கொண்டு கென்யாவில் அமைக்கப்பட உள்ள சாலை.!!

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம், தனது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘PathAhead’ நிறுவனம் மூலம் கென்யாவின் கட்டுமானத் துறையில் நுழைவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை கட்டுமானக் கல்லான ரைசிங் சாண்ட் (Rising Sand)-ஐ உருவாக்கியுள்ளது.

உலகளவில் பெரும்பாலும் கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும் பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணல் போன்றவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாலைவன மணல் பொதுவாக கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. பாலைவன மணல் துகள்கள் மிகவும் நுணுக்கமாகவும், உருண்டையாகவும் காணப்படும் என்பதால் சிமெண்ட்டுடன் வலுவாக கலக்காது, இதனால் இந்த மணலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால் அதன் உறுதி குறையும்.

இந்த சூழலில் தான் PathAhead நிறுவனம் நுண் மணல் துகள்களை ஒருங்கிணைத்து வலுவான ‘செயற்கை ஜல்லிகளாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அசத்தி உள்ளது. செயற்கை கலவையான ‘ரைசிங் சாண்ட்’ என்பது நுண்ணிய, சீரற்ற பாலைவன மணல் துகள்கள் மிகவும் சீரான, அதிக கடினத்தன்மை கொண்ட செயற்கை கூழாங்கற்களாக மாற்றப்படுகிறது. அதே போல சாதாரண இயற்கை மணலை கொண்டு போடப்படும் சாலைகளை விட, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘ரைசிங் சாண்ட்’ மூலம் போடப்படும் சாலைகள் 3 மடங்கு கூடுதல் உறுதி தன்மையுடன் நீடித்துழைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வணிகமயமாக்குவதை நோக்கிய முதல் படியாக, PathAhead நிறுவனம், சாலை அமைக்கும் பயன்பாடுகளுக்காக ரைசிங் சாண்டின் செயல்விளக்கச் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. முதலில் 2027-ல் கென்யாவிலும், பின்னர் தான்சானியாவிலும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் இந்தச் சோதனைகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர் காலநிலை மற்றும் போக்குவரத்து நிலைமைகளை கருத்தில் கொண்டு, நிறுவனம் அதன் பயன்பாட்டுத்திறன், நீடித்துழைக்கும் தன்மை மற்றும் தரத்தின் நிலைத்தன்மையைச் சரிபார்க்கும். அதே போல வழக்கமான முறையில் போடப்படும் சாலைகளின் ஆயுட்காலம் பொதுவாக சுமார் 10 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், ரைசிங் சாண்ட்-ஐ கொண்டு கட்டப்படும் சாலைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

Tags : Kenya ,Honda Motors Limited ,PathAhead ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்