ஓசூர், பிப்.18: சூளகிரி அருகே ஒட்டையனூர் கிராமத்தில், 2 ஒற்றை யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 2 மாதமாக முகாமிட்டு, அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து, அந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். அதில் 10 யானைகள் மட்டும் சானமாவு வனப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருந்தன. இதிலும் 8 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. மீதமுள்ள 2 யானைகள் தனித்தனியே பிரிந்து சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், கோபசந்திரம் ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த யானைகள், அப்பகுதி கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.