சின்னாளபட்டி, பிப். 18: சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வந்தார். தற்போது இந்த விடுதியில் சீரமைக்கும் பணி நடக்கிறது. 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்ததால் மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். விடுதி அறைகள், குளியலறை, கழிப்பறை என அனைத்து இடங்களில் பராமரிப்பு வேலை நடப்பதால் மாணவர்கள் திறந்தவெளியில் உடைமைகள், பாட புத்தகங்களை வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கின் போது சீரமைக்காமல் பள்ளிகளை திறந்த பின் பணிகளை செய்கின்றனர். இதனால் மாணவர்கள் விடுதி வெளியே கடும் பனிப்பொழிவில் நடுங்கியபடியே தங்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். எனவே விடுதியில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து மாணவர்கள் பாதுகாப்பாக தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.