தென்காசி, மார்ச் 27: ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கமல்கிஷோர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு 23.03.2026 அன்று தென்காசி ஒருங்கிணைந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறையினை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கமல்கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பட்டி டிடிடிஏ தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், ஆலங்குளம் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
