சங்ககிரி, மார்ச் 27: சங்ககிரி நகராட்சி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘‘வாங்க ஓட்டு போடலாம்” விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய மனித சங்கிலி பேரணியானது பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முடிந்தது. இப்பேரணியில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கோமதி, தேர்தல் துணை தாசில்தார் அன்பரசி, வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விளக்கினர். மேலும், அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
