×

மேற்கு ஆசியா போர் நெருக்கடி மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தேர்தல் நடக்கும் 5 மாநில முதல்வர்களுக்கு விலக்கு

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில், தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மட்டும் பங்கேற்காது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மேற்கு ஆசியா போரால் எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மேற்கு ஆசியா போரால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சவால்களை சமாளிப்பதில் டீம் இந்தியா உணர்வோடு ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதில் இந்த கூட்டம் முக்கிய கவனம் செலுத்தும் என ஒன்றிய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துவார். இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில முதல்வர்கள் மட்டும் பங்கேற்க மாட்டார்கள். இந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய அமைச்சரவை செயலகம் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு ஆசியா போர் சூழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இதன் பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடும் என்றும் கொரோனா காலத்தை போல இப்போதும் தயாராகவும் ஒற்றுமையுடனும் இருக்குமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Tags : PM Modi ,West Asia ,war crisis ,Tamil Nadu ,Chief MLA ,Stalin ,NEW DELHI ,PM ,MODI ,WEST ASIA WAR ,Iran ,United ,States ,Israel ,
× RELATED அவைக்கு டி சர்ட் அணிந்து வரும்...