புதுடெல்லி: நாட்டில் வெறிநாய் கடி தடுப்பூசி மற்றும் வெறி நாய் கடி இம்யூனோகுளோபுலின் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணை கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா, நாட்டில் வெறிநாய் கடி தடுப்பூசி(ஏஆர்பி) மற்றும் வெறி நாய் கடி இம்யூனோகுளோபுலின்(ஆர்ஐஜி) ஆகியவை போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
அவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றும் நடைமுறையில் உள்ளது. நாட்டில் ஏஆர்வி மற்றும் ஆர்ஐஜிக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு நிலவுவதாக கருதப்படும் எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை” என்றார்.
