ஊட்டி, மார்ச் 24: ஊட்டி அருகே மாயார் சாலையில் உடல்நிலை பாதித்த நிலையில் உலா வரும் கரடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் நீர்நிலை மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்ந்த நோய்வாய்பட்ட கரடி ஒன்று உலா வருகிறது. நடக்க முடியாமல் அங்குமிங்குமாக ஓடி வருகிறது. இதனை பார்த்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இதனிடையே நோய்வாய்பட்ட நிலையில் இருக்கும் கரடிக்கு வனத்துறை சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
