சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போதும் கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று காலை 5.45 மணிக்கு கபாலீசுவரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 6.20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்றம் நடந்தது. கொடியேற்ற விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின், விமான சேவை நடந்தது. நேற்று இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகனங்கள் புறப்பாடும் நடந்தது. மேலும், நாளை அதிகார நந்திக் காட்சி நடக்கிறது. தொடர்ந்து, கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளிவிடை வாகனங்கள் புறப்பாடும், திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடக்கிறது. மார்ச் 27ம் தேதி வெள்ளி ரிஷப வாகனக் காட்சி நடக்கிறது. பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான கபாலீசுவரர் தேரில் மார்ச் 29ம் தேதி காலை எழுந்தருள்கிறார். மேலும், 8ம் நாள் விழாவாக மார்ச் 30ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். மார்ச் 31ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, ஏப். 1ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது.
