திருவொற்றியூர்: மணலி மண்டலத்தை முன்மாதிரி மண்டலமாக உருவாக்க முழுக்க முழுக்க பெண் தூய்மை பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், இங்கு பணிபுரிந்து வந்த ஆண் தூய்மை பணியாளர்களை வேறு மண்டலங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஆண் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தங்களை மணலி மண்டலத்திலேயே பணியமர்த்த வலியுறுத்தி இவர்கள் நேற்று மண்டல அலுவலகத்தில் திரண்டனர்.திமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, முன்னாள் கவுன்சிலர் ஏ.வி. ஆறுமுகம், நிர்வாகிகள் பரந்தாமன், புழல் நாராயணன், முத்துசாமி பாபு,ரமேஷ், தாமரைச்செல்வன் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.