×

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம் செய்ததற்கு அப்பேரவைப்பின் தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய அளவில் உணவுத்தரநிர்ணய சான்றிதழ்கள் பெறுவதற்கான நடைமுறையும், அதனை ஆண்டுதோறும் புதுப்பித்தலுக்கான செயல்பாடுகளும் ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

குறிப்பாக உணவுப்பாதுகாப்பு தரநிர்ணய சட்ட அமலாக்கம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இச்சட்ட நடைமுறைகளின்படி உணவு தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய உரிமம் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயம். பதிவு செய்யப்பட்ட உரிமத்தை, மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை, ஆண்டுதோறும் உரிமக்கட்டணம் பெற்று புதுப்பித்து வந்தது. இந்த நடைமுறை சாமான்ய உணவுப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், உணவுப்பொருள் வணிகத்தை நெடுங்காலமாக செய்து வருகின்ற விவசாய, வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கும் கடும் நெருக்கடியையும், உரிமம் புதுப்பித்தலில் உள்ள கால தாமதத்திற்கு அபராதம் கட்டணம் செலுத்தும் சிரமங்களும் இருந்து வந்ததை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுத்துச் சென்றதுடன், கடந்த 5 ஆண்டுகளாக மாநாட்டு தீர்மானங்களின் ஒன்றாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் அளித்த கோரிக்கைகளில் ஒன்றாகவும், துறைசார்ந்த அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் கோரிக்கையுடன் நேரில் சந்தித்து மிகுந்த அழுத்தமும் தரப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி வந்த தீர்மானத்தை ஏற்று, தீர்வு காணும் விதமாக ஒன்றிய அரசு, கடந்த மார்ச் 14 அன்று, ஏப்ரல் 2026 முதல் உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணயச் சட்டங்களின்படி உணவுப்பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்கத் தேவையில்லை என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அறிவித்திருப்பது கோடான கோடி உணவுப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்திருப்பதுடன், சான்றிதழ்கள் புதுப்பித்தலில் உள்ள இடையூறுகள், நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருப்பதை வரவேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நன்றியையும், பாராட்டுக்களையும் இந்நேரத்தில் பதிவு செய்கின்றது.

நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்துள்ள தெருவோர உணவு வியாபாரிகள் இனி உணவுப் பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்துள்ளதே போதுமானது என்றும், மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை வாயிலாக நாடு முழுவதிலும் உள்ள ஏறத்தாழ 25 லட்சத்திற்கும் அதிகமான தெருவோர உணவு வியாபாரிகள் பயனடைவார்கள். மேலும், புதிய உரிமம் பெற ஆண்டு வருவாய் வரம்புகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக எஃப்.எஸ்.எஸ்.ஐ பதிவு செய்ய ரூ.1.5 கோடி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமம் பெற உச்சவரம்பு ரூ.50 கோடியாகவும், மத்திய உரிமம் பெற 50 கோடிக்கு மேல் என்றும் நிர்ணயித்திருப்பது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த நடவடிக்கை வாயிலாக அரசு அதிகாரிகளின் தலையீடுகளும் குறுக்கீடுகளும், அத்துமீறல்களும் நிச்சயம் தவிர்க்கப்படும் என பேரமைப்பு எதிர்பார்க்கின்றது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Federation of Traders' Associations ,Wickramaraja ,Chennai ,President ,Federation of Traders' Associations of ,Tamil ,Nadu ,Federation of Traders' Associations of Tamil Nadu ,India ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள்...