மாமல்லபுரம், மார்ச் 17: மாமல்லபுரத்தில் பவர் ரூல்ஸ் கடைக்குள் புகுந்த புள்ளிமானை பிடித்து தீயணைப்பு துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர், அண்ணா நகர் பகுதியில் டூல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இரை தேடி வந்த புள்ளிமான் ஒன்று திடீரென டூல்ஸ் கடைக்குள் புகுந்தது. இது குறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில், 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, டூல்ஸ் கடைக்குள் பதுங்கி இருந்த புள்ளி மானை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, நேரில் வரவழைத்து புள்ளிமானை ஒப்படைத்தனர்.
