×

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி முதல் பிப்.13-ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவையில் பிப்.2ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்னை குறித்துப் பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதில் 118 எம்பிக்கள் கையெழுத்திட்டனர்.

அந்த நோட்டீசில், மக்களவையின் நடவடிக்கைகளை அவர் ஒருதலைப்பட்சமாக நடத்தி வருவதே இதற்குக் காரணமாகும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பேசுவதற்கான வாய்ப்பு,வழங்கப்படவில்லை.பிப்ரவரி 3ம் தேதி எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

இது குறித்து,இரண்டு நாள் விவாதம் நடந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சர் பதிலளித்து பேசினார். அப்போது அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருந்த பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால், இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். எனவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் சென்று அமர வேண்டும் என்று கேட்டு கொண்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அவையில் பெரும்பான்மை உள்ளதால் ஆளும் கட்சி எம்பிக்கள் தங்கள் கைகளை உயர்த்தி தீர்மானத்தை தோல்வியடைய செய்தனர்.

* நடுநிலை பாதுகாவலர்
தீர்மானம் குறித்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது,சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நடுநிலை பாதுகாவலராக பணியாற்றுகிறார். சபை அதன் சொந்த விதிகளின்படி நடத்தப்படும், ஒரு கட்சியின் விதிகளின்படி அல்ல. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, சபாநாயகருக்கு எதிராக இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

* நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானது அல்ல: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாரபட்சமாக நடந்து கொள்வதால் அவரை பதவி நீக்கம் செய்ய கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நேற்று 2வது நாளாக விவாதம் நடந்தது. இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்த விவாதம் ஜனநாயக செயல்முறை மற்றும் அதில் சபாநாயகரின் பங்கு பற்றியது. கடைசியாக நான் பேசியபோது நான் நரவனே புத்தகம் குறித்த பிரச்னையை எழுப்பினேன். எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி பிரச்னை எழுப்பினேன். அதானி பிரச்னையை எழுப்பினேன். இந்த பிரச்னைகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அடிப்படை.

இந்த விவகாரங்களில் நமது பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். அதன் விளைவுகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பிரச்னைகளை எழுப்பியபோது நான் தடுக்கப்பட்டேன். நான் ஒவ்வொரு முறை பேச எழுந்தாலும் பேசவிடாமல் தடுக்கப்படுகிறேன். ஆனால், இந்த அவையில் பலமுறை என்னை பற்றி கீழ்த்தரமான விஷயங்கள் பேசப்படுகின்றன. எனவே, இங்குள்ள விவாதம் ஜனநாயக செயல்முறைகள் மற்றும் அவை நடவடிக்கையில் சபாநாயகரின் பங்கு பற்றியது. நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானது மட்டுமல்ல, மாறாக, அது முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என காட்டமாக தெரிவித்தார்.

* சபாநாயகர் எங்களிடம் சொல்லும் ஒரே வார்த்தை இல்லை, இல்லை எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டு
சபாநாயகரை நீக்க கோரும் தீர்மானத்தின் போது பேசிய எம்பிக்கள் பலர் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பி பேச முயன்றால் சபாநாயகர் ஓம் பிர்லா சொல்லும் ஒரே வார்த்தை இல்லை(நோ), இல்லை(நோ) தான். எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அந்த இருக்கையில் இருந்து போதுமான பாதுகாப்பு கிடைப்பது இல்லை. நாங்கள் பேசும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்கின்றனர் என்றனர். ஆர்ஜேடி எம்பி அபய்குமார் சின்கா, நேரு காலத்தில் இருந்த சபாநாயகர் என்ற நடுநிலைத்தன்மை இப்போது இல்லை. ஒரே நாளில் 140 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்வு அவையில் நடந்துள்ளது என்றார். ஜேஎம்எம் கட்சியின் விஜய் குமார் ஹன்ஸ்டா, எதிர்க்கட்சியினர் பேச்சை ஆளும் கட்சியினர் இடையூறு செய்கின்றனர். ஓம் பிர்லா இரண்டாவது முறையாக இப்பதவியை வகிக்கிறார். அவையில் நேருவுக்கு பின்னர் அதிகம் கேட்கப்படும் சொல் நோ, நோ என்பது தான். எதிர்க்கட்சியினர் பேசும் போது அவையில் உள்ள கேமரா வேறு பக்கம் திரும்பி விடுவதை பார்க்கலாம் என்றார்.

* மோடி ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்: ரவி சங்கர் பிரசாத்
மோடி சமரசம் செய்து கொள்வதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜ உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி சொல்வது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிரதமர் மோடி எதற்காகவும், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். மேலும், தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். சபாநாயகருக்கு எதிரான இந்த நம்விக்கையில்லா தீர்மானம், சில தலைவர்கள் அல்லது சில குழுக்களின் கர்வத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ளது” என ஆவேசமாக தெரிவித்தார்.

Tags : Speaker of the People ,Assembly ,Om Birla ,New Delhi ,Parliamentary Budget Meeting ,Rahul Gandhi ,Lalakawa ,
× RELATED மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான...