புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை தணிக்க, சமையல் காஸ் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டிலும் ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட உத்தரவு: ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முன்னுரிமை துறைகளுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்பட உள்ளது.
* குழாய்கள் மூலம் வீட்டிற்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு (பிஎன்ஜி), வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு, சமையல் காஸ் ஆகிய எரிவாயுக்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்துறைகளுக்கு கடந்த 6 மாத சராசரி எரிவாயு நுகர்வில் 100 சதவீதம் வழங்கப்படும்.
* இரண்டாவது முன்னுரிமையாக, உர ஆலைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் 70 சதவீத இயற்கை எரிவாயு வழங்கப்படும். இதை உர உற்பத்திக்கு தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. வேறு எந்த ஆலைகளுக்கும் திருப்பி விடக் கூடாது.
* 3வது முன்னுரிமையாக தேயிலை தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு கடந்த 6 மாத சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவீதம் வழங்கப்படும். 4வது முன்னுரிமையாக தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு எரிவாயு வழங்கும் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு 80 சதவீத எரிவாயு வழங்கப்படும்.
* பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதிக விலை கொண்ட எரிவாயு நுகர்வோருக்கான இயற்கை எரிவாயு விநியோகங்களைக் குறைப்பதன் மூலம் அவை முன்னுரிமைத் துறைகளுக்கு திருப்பி விடப்படும்.
* இயற்கை எரிவாயு என்பது கச்சா எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் துணை பொருளாகும். இதில் புரொப்பேன், பியூட்டேன் வாயுக்களை பிரித்து சுத்திகரிப்பதன் மூலம் எல்பிஜி தயாரிக்கப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்படுகிறது.
* இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம், உரம், வாகனங்களுக்கான சிஎன்ஜி மற்றும் சமையல் காஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
* இயற்கை எரிவாயுவிலிருந்துதான் சுமார் 62% எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது.
* இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
* எரிவாயு உற்பத்தி 10% அதிகரிப்பு
ஒன்றிய எண்ணெய் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஈரான் போரால் இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளைக்கு தேவையான 191 மில்லியன் நிலையான கனமீட்டர் எரிவாயு நுகர்வில் பாதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. மத்திய கிழக்கில் இருந்து 60 மில்லியன் கனமீட்டர் எரிவாயு தடைபட்டுள்ளது. பெட்ரோ கெமிக்கல்களுக்கான இயற்கை எரிவாயுவை முக்கிய துறைகளுக்கு திருப்பி விட்டதன் மூலம் இப்போது எரிவாயு உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றார்.
