×

சொத்துரிமை பாகுபாடு தீர்க்க பொது சிவில் சட்டமே சிறந்தது: உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

புதுடெல்லி: இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் கீழ் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து பலோமி பவினி மற்றும் நயாயா நாரி பவுண்டேஷன் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,” வாரிசுரிமை என்பது ஒரு சிவில் உரிமை ஆகும். அது ஒன்றும் கண்டிப்பாக மத சடங்கு கிடையாது. குறிப்பாக ஒரே மதத்தை சேர்ந்தவர்களுக்குள்ளேயே சொத்துரிமையில் பாகுபாடு காட்டுவது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆகும். எனவே முத்தலாக் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வு கண்டதை போன்று, இந்த விவகாரத்திலும் உச்ச நீதிமன்றமே தலையிட்டு ஒரு சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,”பாகுபாடான சட்டங்களுக்குப் பொது சிவில் சட்டமே மிகச்சிறந்த மற்றும் பயனுள்ள தீர்வாகும். நீதிமன்றம் ஒரு சட்டத்தை ரத்து செய்வதை விட, நாடாளுமன்றம் ஒரு பொதுவான சட்டத்தைக் கொண்டு வருவது தான் சரியான ஒன்றாக அமையும். இருப்பினும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தற்போது உள்ள சட்டத்தை ரத்து செய்தால், வாரிசுரிமை விவகாரங்களில் ஒரு சட்ட வெற்றிடம் என்பது உருவாகும். அவ்வாறான பட்சத்தில் பெண்களுக்கு தற்போது கிடைத்து வரும் குறைந்தபட்ச உரிமைகளையு பறிக்கக்கூடும். எனவே, கொள்கை ரீதியாக அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என்று தெரிவித்தார்.பின்னர் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,Palomi Bhavini ,Naya Nari Foundation ,Chief Justice ,Suryakanth ,Supreme Court… ,
× RELATED பாகிஸ்தானில் தீவிர சிக்கன நடவடிக்கை...