×

தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம், மார்ச் 11: சேலம் தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர், ஆதார், சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை ‘இ-மெயில்’ மூலம், அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தபால் துறை அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. தபால் நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த வாரமும் தபால் நிலையத்துக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chief Post Office ,Salem ,
× RELATED வெள்ளிப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி