×

3வது முறையாக கோப்பையை வென்று இந்தியா சாதனை; பும்ரா இந்த தேசத்தின் சொத்து! கேப்டன் சூர்யகுமார் நெகிழ்ச்சி

 

அகமதாபாத்: 10வது ஐசிசி டி.20உலக கோப்பை தொடரில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 255ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 46 பந்தில், 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89, அபிஷேக் சர்மா 21 பந்தில் 52, இஷான் கிஷன் 25 பந்தில் 54ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 96 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்று 3வது முறையாக டி.20 உலக கோப்பையை கைப்பற்றியது. 4 ஓவரில் 15 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐந்தே போட்டியில் 321 ரன் குவித்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன் பிசிசிஐ நிர்வாகிகளும் ரோகித்தும் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தனர். 2 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே ஆடி வந்தோம். சஞ்சு, வருண், அபிஷேக் போன்றோர் மேட்ச் வின்னர்கள். அவர்களிடம் ஸ்பெஷலான ஒரு விஷயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். பும்ரா இந்த தேசத்தின் சொத்து. ஒரு தலைமுறைக்கான வீரர் அவர். முக்கியமான ஆட்டங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். எப்படி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர். எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் 1 வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும். இதுதான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம்.

 

Tags : India ,Bumrah ,SURYAKUMAR ,Ahmedabad ,New Zealand ,10th ICC T20 World Cup Series ,
× RELATED ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கிய நடுவர்!