×

திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2026 மார்ச் 16ம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக்க கழகத்திற்கான 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக வேட்பாளராக திருச்சி சிவா, பேராசிரியர் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவா, திருச்சியில் 1954ல் பிறந்தார். இவரது மனைவி தேவிகாராணி. மகள்கள் காயத்ரி, பத்மபிரியா, மகன் சூர்யா. இவர், முதுகலை பட்டம் பெற்றவர், சட்டம் பயின்றவர். 1976ல் மிசாவில் கைது செய்யப்பட்டார். மாவட்ட இளைஞர் அணி, கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். 1996, 2002, 2007, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது 6வது முறையாக மாநிலங்களவை எம்பியாக தற்போது தேர்வ செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். பேராசிரியர். எம்இ, எம்சிஏ, எம்பிஏ, எல்எல்பி, பிஎச்டி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு வரை கணினி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் தேமுதிக தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் இணைந்தார். 2016ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் அவருக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,Trichy Siva ,Constantine Ravindran ,Rajya Sabha ,Chennai ,president ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!