சிவகிரி,மார்ச் 4: வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகிரி காமராஜர் கீழத்தெருவை சேர்ந்த அழகுசாமி மகன் மோசஸ் (38). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வாசுதேவநல்லூரில் வேலையை முடித்துவிட்டு பைக்கில் சிவகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் ஆத்துவழி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ராஜபாளையத்தில் இருந்து வாசுதேவநல்லூருக்கு கோழி ஏற்றி வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் மோசஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தொழிலாளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்கு பதிந்து சரக்கு வாகனத்தின் டிரைவர் சொக்கநாதன்புத்தூர் மாரிமுத்து மகன் மகேஸ்வரனை (20) கைது செய்தார்.
