×

ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கிழங்கு பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பயிற்சி

ஊட்டி : மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் கூடலூர் விவசாயிகளுக்கு கிழங்கு பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கூடலூரில் உள்ள கப்பலா கிராமத்தில், பழங்குடி துணைத் திட்டத்தில் “வெப்பமண்டல கிழங்கு பயிர்களின் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பண்ணை உள்ளீடுகளின் விநியோகம்” குறித்த விவசாயிகளுக்கான பயிற்சித் திட்ட நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கவிதா தொடங்கி வைத்தார்.

முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் மற்றும் பழங்குடி துணைத் திட்ட இணை முதன்மை ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் கையாண்டனர். வெப்பமண்டல கிழங்கு பயிர்களின் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான பயிற்சி அளித்தனர்.

கப்பலா கிராமத்தின் பல்வேறு குக்கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 80 விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பயனாளிகளுக்கு முக்கியமான பண்ணை உள்ளீடுகள் விநியோகிக்கப்பட்டன.

இவற்றில் பவர் ஸ்ப்ரேயர்கள், மண்வெட்டிகள், குத்து கோடாளி, கடப்பாறைகள், குழாய்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்து கலவை (சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கான மைக்ரோனோல்), டிரைக்கோடெர்மா சூத்திரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு நடவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில், பூ கிருஷ்ணா, பூ சோனா மற்றும் எஸ்பி 95/4 வகைகளின் சர்க்கரை வள்ளிக்கிழங்கு நடவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Tags : Ooty Horticultural Research Institute ,Ooty ,Gudalur ,Central Tuber Crops Research Institute ,Horticultural Research Institute ,Thiruvananthapuram, Kerala… ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...