×

பத்தலஹள்ளி காப்புக்காட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சுற்றுலா விழிப்புணர்வு

அரூர் : தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயற்கை சுற்றுலா மற்றும் வனத்தினை பற்றிய விழிப்புணர்வு முகாம், மொரப்பூர் வனச்சரகம், ஒடசல்பட்டி வனக்காவல் சுற்றுக்குட்பட்ட பத்தலஹள்ளி காப்புக்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த இயற்கை சுற்றுலாவில் சோலக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வை மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் தலைமையேற்று நடத்தினார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு வனம் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம், உணவு சங்கிலியின் முக்கியத்துவம், வனத்தினால் கிடைக்கும் நன்மைகள், வனத்தீ ஏற்படாமல் பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவர்கள் இயற்கை நடை பயணமாக பத்தலஹள்ளி காப்புக்காட்டில் 2கிமீ., அழைத்து செல்லப்பட்டு என்எச்ஏஐ திட்டத்தில் நடவு செய்யப்பட்ட பல இன மரங்களையும், அதன் முக்கியத்துவம், வனக்களப்பணியாளர்களின் கள அறிவின் மூலமாகவும், கள அனுபவத்தின் மூலமாகவும் பெற்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய உணவு, நோட்டு புத்தகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் வனத்துறை சார்பாக செய்யப்பட்டது. இதில் மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன், வனவர் சுருதி மற்றும் வனக்காப்பாளர்கள் ஹேமசுந்தர், தேவகி, கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pathalahalli Reserve ,Arur ,Dharmapuri District Forest Department ,Morappur Forest Reserve ,Odasalpatti Forest Guard ,Solakottai Government… ,
× RELATED கோத்தகிரி தேயிலை தோட்டத்தில்...