ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; வார விடுமுறை தினத்திலும் அதிரடியாக பவுனுக்கு ரூ.1800 உயர்ந்த தங்கம்: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக வார விடுமுறை தினமான நேற்றும் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1800 உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாகும்.

இந்த நேரத்தில் விலை உயர்வு என்பது இருக்காது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், பவுனுக்கு ரூ.1800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,200க்கும் விற்பனையானது. இதன்மூலம் 2 நாட்களில் தங்கம் விலை ரூ.7,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.325க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்ற போதிலும், தங்கம் விலை உயருவதற்குப் பின்னால் வலுவான சர்வதேச காரணங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள போர் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உலகளவில் நிலவும் இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நிபுணர்களின் கருத்துப்படி, இந்தப் போர் பதற்றம் நீடிக்கும் வரை தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: