70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தமிழகத்தில் இரட்டை வேட்பாளர் முறை நடைமுறையில் இருந்தது. இரட்டை வேட்பாளர் தொகுதிகளில் 2 வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இதில் ஒரு வேட்பாளர் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவராகவும், மற்றொரு வேட்பாளர் பொதுப்பிரிவை சேர்ந்தவராகவும் இருப்பார். இதன்படி இந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவின்போது இரண்டு பிரிவை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். இந்த இரட்டை வேட்பாளர் தொகுதிகள், 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி நீக்கப்பட்டது. அதன்பிறகே தனித்தொகுதிகள் தற்போதைய முறைப்படி உருவாக்கப்பட்டது. அதிராம்பட்டினம், சிதம்பரம், குடியாத்தம், அரூர், ஜெயங்கொண்டம், கரூர், மதுராந்தகம், மன்னார்குடி, மாயவரம் (மயிலாடுதுறை), மேலூர், முதுகுளத்தூர், நாகப்பட்டினம், நம்பியூர், நன்னிலம், நிலக்கோட்ைட, நீலகிரி, பெரம்பலூர், பெரியகுளம், பொள்ளாச்சி, பொன்னேரி, சைதாப்பேட்டை, சங்கரன்ேகாயில், வில்லிபுத்தூர், தஞ்சாவூர், ஆயிரம் விளக்கு, திண்டிவனம், திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருமயம், திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தேர்வுமுறை இருந்தது. ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம் 309 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டிருந்தது. இதில் 243 தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகள்.
எஞ்சிய 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக இருந்தது. இதன்பிறகு மெட்ராஸ் மாநிலம் “தமிழ்நாடு” என்று மறுபெயரிடப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களும் தனித்தனியே உருவாகின. இந்த பிரிப்புகளின் காரணமாக 1957 தேர்தலின்போது தொகுதிகளின் எண்ணிக்கை 167 ஆக குறைந்தது. இதில் 128 தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாக இருந்தது. 39 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக இருந்தது. ஒரு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள் இருக்கும் முறையில் ஒரு எம்எல்ஏ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினராகவும், மற்றொரு எம்எல்ஏ பொதுப்பிரிவிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சட்டமன்றத் தொகுதியில் 1951 தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட துரைசாமி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நஞ்சப்பன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முனுசாமி கவுண்டர், மாரியப்பன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். 1952ம் ஆண்டு உருவான நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு தொகுதியும் இரட்டை எம்எல்ஏ தொகுதியாக இருந்தது. முதல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.எஸ்.அர்த்தனாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1957ம் ஆண்டு
தேர்தலிலும் இந்தமுறை தொடர்ந்தது.
