அருப்புக்கோட்டை, பிப். 9: அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீமைக்க போக்குவரத்து போலீசார் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் சிவன் கோவில் சந்திப்பு, விருதுநகர் ரோடு, எம்.எஸ் கார்னர், அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அண்ணா சிலை பகுதியில் காய்கறி, பலசரக்கு, கமிஷன் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அண்ணா சிலை பகுதி வழியாக திருச்சுழி, கமுதி, பந்தல்குடி, விளாத்திகுளம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இந்நிலையில், அண்ணாசிலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சீரமைக்க அருப்புக்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டது. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐக்கள் என 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும் விஐபி வருகை, கோவில் திருவிழா என மாற்றுப்பணிக்காக சென்று விடுகின்றனர்.