×

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

*கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கடத்தூர் : கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட், தாளநத்தம் உள்ளிட்ட பகுதியில் சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடத்தூர் ஒன்றியம் குருபர அள்ளி, வேப்பிலைபட்டி, நொச்சிகுட்டை, அய்யம்பட்டி, புட்டிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் நாளுக்குநாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையோரம் ஆங்காங்கே குப்பையுடன் கொட்டப்படும் இறைச்சிக்கடை, ஓட்டல்கடை கழிவுகளை சாப்பிட சாலையில் ஆங்காங்கே நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் சாலையை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் சாலையில் மனித நடமாட்டம் குறையும் போது, தெரு நாய்களின் கூட்டம் சாலையின் நடுப்பகுதியிலேயே படுத்துக் கொள்வதால், அவ்வழியாக டூவீலரில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகின்றனர். உடலில் காயம் ஏற்படுவதுடன், நாய்களால் கடிபட்டு, அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களை பிடித்து பாதுகாப்பான இடங்களில் அடைக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Puttirettipatti Railway Gate ,Kadtur ,Thalanatham ,Kadtur union ,Kurupara Alli ,Veppilaipatti ,Nochchikuttai ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...