சுங்கச்சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்: பாஸ்டேக் முறையை அமல்படுத்தியதால் மக்கள் எந்த வகையில் பயன் பெற்றனர்: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையை அமல்படுத்தியதால் மக்கள் எந்த வகையில் பயன் பெற்றனர் என்று தயாநிதி மாறன் எம்பி நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், பாஸ்டேக் முறை தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: நாடு முழுவதும் பாஸ்டேக் முறையை அமல்படுத்திய பின்னர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன, என ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அரசாங்கம் அறிந்து இருக்கிதா.

அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அரசாங்கத்தின் தீர்வு நடவடிக்கை என்ன என்பதை தெரியப்படுத்தவும். பாஸ்டேக் முறை அமல்படுத்துவதற்கு முன்பு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும் நிமிடத்தையும், பாஸ்டேக் அமல்படுத்திய பின்னர் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நிமிடத்தில் உள்ள வித்தியாசத்தையும், அதனால் மக்கள் எந்த வகையில் பயன் பெறுகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்தவும்.

பாஸ்டேக் அமல்படுத்திய பிறகு அதன்மூலம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஏதேனும் புகார்கள் எழுந்துள்ளனவா என்பதையும் தெரியப்படுத்தவும். இந்த பாஸ்டேக் திட்டத்தினை மேலும் திறம்பட செயல்படும் வகையில் ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா எனவும் தெரியப்படுத்தவும்.  இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பினார்.

Related Stories: