சேலம், பிப்.8: பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, மாணவர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்தையடுத்து, படிப்படியாக கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7ம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.