×

மேற்குவங்க பழங்குடியினர் வாக்குகளை கவர மாஜி முதல்வரான ‘கோல்கன் புலி’-யை களமிறக்கும் பாஜக

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு பழங்குடியின மக்களின் ஆதரவை திரட்ட ஜார்கண்ட் முன்னாள் முதல்வரை பாஜக களமிறக்கியுள்ளது. ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரான சம்பாய் சோரன், அம்மாநில ஆளும் கட்சியான ஜேஎம்எம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறி கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். ‘கோல்கன் புலி’ என்று அழைக்கப்படும் இவர், சந்தாலி பழங்குடியின மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு கொண்டவர்.

ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் கடந்த கால தேர்தல்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இந்தச் சூழலை சரிசெய்யவும் பழங்குடியின மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் ஜார்கண்ட் மாநில எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்க மாவட்டங்களில் சம்பாய் சோரனை பயன்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு புருலியா, பாங்குரா, மிட்னாப்பூர் மற்றும் ஜார்கிராம் ஆகிய 4 முக்கிய மாவட்டங்களில் சம்பாய் சோரனுக்கு சிறப்பு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பின்பற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொள்கைகளை விளக்கி போராட்டங்களை நடத்த உள்ளார். மேலும் வங்கதேச ஊடுருவலால் பழங்குடியினரின் அடையாளத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : BJP ,Jharkhand ,CM ,Kolgan Tiger ,West Bengal ,Kolkata ,West Bengal assembly ,Chief Minister ,Sambhai Soren ,JMM ,
× RELATED சட்டமன்ற வளாகத்தில் முதல்வர்...