×

276 கிலோ வாளை மீன்கள் பறிமுதல்

 

மேட்டூர், பிப். 19: மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான சேத்துக்குழியில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை, கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்யாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக, மேட்டூர் மீன்வளத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமாகலைச்செல்வி உத்தரவின் பேரில், மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் மீன்வள பாதுகாவலர்கள், கொளத்தூர் அருகே உள்ள சேத்துகுழி காவிரி கரையில் மறைந்திருந்தனர். அப்போது, தர்மபுரி மாவட்டம், நெருப்பூர் பகுதியில் இருந்து பரிசலில் வந்த சிலர், மீன்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

கரையில் கண்காணித்து கொண்டிருந்த மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் அங்கு செல்லும் போது அவர்களை பார்த்த வியாபாரிகள், மீன்களை போட்டு விட்டு டூவீலரில் தப்பிச்சென்றனர். பின்னர், மீன்களை பறிமுதல் செய்த மீன்வளத்துறையினர், அதை மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ முதல் 12.5 கிலோ வரை எடை கொண்ட வாளை மீன்களாகும். இவற்றின் மதிப்பு ரூ.42,130 ஆகும். தப்பியோடிய கள்ளச்சந்தை வியாபாரிகள் குறித்து மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Mettur ,Mettur Fisheries Department ,Sethukuzhi ,Mettur reservoir ,Fisheries Department ,Assistant Director ,Umagalaichelvi ,
× RELATED 5 வயது மகளுடன் இளம்பெண் மாயம்