மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு எனச் சொல்லியிருக்கிறார்கள். அப்பட்ஜெட்டை முழுமையாக படித்துவிட்டு பதில் சொல்கிறேன். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, அத்தகைய சூழல் வருகிறதா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கோவையில் ஈசா மைய அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். அங்கு ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எல்.முருகன், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதுவை அமைச்சர்கள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டுக்கு பிரதமரின் வருகையில் நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவதில் தவறில்லை, அதனால் தமிழக மக்களுக்கும் தமிழ்நாடும் சிறப்படைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
